ஈழத் தமிழின் மெல்லிசைப் பாரம்பரியத்தில் அழியாத தடம் பதித்த பாடல்களில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளக்கூடிய பாடல்களில் ஒன்று “அழகான ஒரு சோடிக் கண்கள்”.
இந்தப் பாடல் ஒரு நாள் திடீரென பிறந்ததல்ல. அது ஒரு இளம் மாணவனின் மனத் துடிப்பிலிருந்து முளைத்த கவிதை. 1956ஆம் ஆண்டு, மாணவப் பருவத்தில், உயர்தர வகுப்பில் பாடம் எடுத்த ஆசிரியையின் சுழலும் கண்களைப் பார்த்து, பள்ளிக் கரும்பலகையில் முதன்முதலாக அவர் எழுதிய வரிகளே இக்கவிதையின் விதை.
அந்த வயதின் குறும்பும் கற்பனையும் காரணமாக, நண்பர்களாலும் சில ஆசிரியர்களாலும் கிண்டலுக்குள்ளானாலும், கவிதை அவரது உள்ளத்தில் உயிரோடு வாழ்ந்தது.
பத்து ஆண்டுகள் கழித்து – 1966 ஆம் ஆண்டு... புகையிரத பயணத்தில் சந்தித்த ஒரு பெண். அவருடன் பேசிக் கொண்டே வந்தாள். அவள் இறங்கும்போது தட்டுத் தடுமாறினாள். அவளது கண்ணாடி கழன்றது. ஆனால் 'கண்கள்' இல்லை.
அந்த நொடியின் அதிர்ச்சி பழைய கவிதையை மீண்டும் உயிர்ப்பித்தது.
புகையிரதத்தில் கவிதையை மறுபடியும் எழுதி, “கண்ணூறு” எனப் பெயரிட்டு தினகரனுக்கு அனுப்பினார். அது வெளியானதையும் அவர் அறியவில்லை.
பின்னர், அதே கவிதை எம்.ஏ. ரொக்சாமியின் இசையிலும் எஸ்.கே. பரராஜசிங்கத்தின் குரலிலும் மெல்லிசைப் பாடலாக வானொலியில் ஒலிக்கத் தொடங்கியது.
ஆனால் – கவிஞரின் பெயரில்லாமல்!
பாடல் நாடெங்கும் பிரபலமானது. மக்கள் முணுமுணுத்தார்கள். இதயங்கள் இணைந்தன. ஆனால் படைப்பாளி எதனையும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தார் “கவிஞன் மறைந்து, கவிதை மட்டும் வாழட்டும்” என்ற மனநிலையோடு.
1978இல் வானொலி பேட்டியில்தான் “அது என் பாடல்” என்று சிரித்தபடி சொன்னார் பஸீல் காரியப்பர் அவர்கள். அதுவே உண்மையின் வெளிச்சம்.
அதன் பின் கடற்கரை தொழிலாளி முதல் கலாநிதி வரை எல்லோரின் இதயத்திலும் இடம்பிடித்த பாடலாக அது நிலைத்தது.
இன்று அது இலக்கியநய பாடத்திட்டத்திலும் ஒரு பாடலாக வலம் வருகின்றது. உண்மையில் அந்தப் பாடல் வரிகளை உச்சரிக்கும் போது, இளமை துள்ளியெழுந்து பழையன மீட்டுகின்றது என்பதே உண்மை.
சுருக்கமாகச் சொன்னால்
ஒரு பள்ளிக் கரும்பலகையில் தொடங்கிய கவிதை



