📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

சில பாடல்களும் அவற்றின் பொருள்களும் | தமிழ்மொழித் தின விழா

நாலடியார்

நாலடியார் 174 | Naladiyar 174
இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும்
பிறப்பினை யாரும் முனியார் - பிறப்பினுள்
பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோடு எஞ்ஞான்றும்
நண்பாற்றி நட்கப் பெறின்.

பொருள்:

மிகவும் ஆராய்ந்து பார்த்தால், பிறப்பு, துன்பம் தருவது எனினும் நற்குணங்கள் நிறைந்த நல்லோருடன் சேர்ந்து அவர் தம் நற்குணங்களைப் பெற்று எல்லா நாளும் அவர்களுடன் நட்புக் கொள்வாராயின் அப்போது யாரும் இந்தப் பிறப்பினை வெறுக்கமாட்டார்கள். (இந்தப் பிறப்பு இனிமையுடையது என்பர்).


நாலடியார் 205 | Naladiyar 205

இன்னர் இனையர் எமர்பிறர் என்னும்சொல்

என்னும் இலராம் இயல்பினால் - துன்னித்

தொலைமக்கள் துன்பம்தீர்ப் பாரேயார் மாட்டும்

தலைமக்கள் ஆகற்பா லார்

பொருள்

இவர் நமக்கு இன்ன வகையான தொடர்பு உடையவர்; இவர் இப்படிப்பட்ட தன்மை உடையவர்; இவர் நமக்கு வேண்டியவர்; இவர் நமக்கு வேண்டாதவர்’ என்றெல்லாம் வேறுபடுத்திப் பேசும் பேச்சுக்கள் யாதொன்றும் இல்லாதவர் களாக விளங்கும் தன்மையினாலே, துன்பத்தால் வருந்தியவராக வந்த சுற்றத்தார் அனைவருடனும் ஒன்று பட்டு, அவர்களுடைய வருத்தத்தைப் போக்குபவர்கள் யாவரோ அவர்களே, எவரிடத்தும் மேன்மக்களாகின்ற தன்மை உடையவர்களா வார்கள்.

இனியவை நாற்பது

வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே

ஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே

இல்லது காமுற் றிரங்கி இடர்ப்படார்

செய்வது செய்தல் இனிது.

பொருள்

வென்றுவிடவேண்டும் என்ற  துடிப்பால் வெகுண்டு எழாத கட்டுப்பாடு, இயன்றவரை மேற்கொண்ட செயலை முடித்துவிட விரும்பும் பொறுமை, கிட்டாதவற்றுக்காக ஏங்கித் துயருற்று இரங்கத்தக்க நிலைக்குச் செல்லாது இயன்றதைச் செய்வது, ஆகியன நன்மை தரும் இனிய செயல்களாகும். 


புறநானூறு

புறநானூறு 12

எருமை அன்ன கருங்கல் இடை தோறு

ஆனிற் பரக்கும் யானைய முன்பின்

கானக நாடனைநீயோ பெரும

நீயோர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்

அருளும் அன்பும் நீக்கி நீங்கா

நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்

குழவி கொள் பவரின் ஓம்புமதி

அளிதோ தானே அது பெறல்அருங் குரைத்தே

                                            - நரிவெரூஉத் தலையார்


பொருள்

கல்மலைகளில் மேயும் எருமை-ஆனின் தோற்றமும் யானை போல் வலிமையும் கொண்ட கானக-நாடன் என்பவன் நீதானா, பெரும!அது நீதான் என்றால் உனக்கு ஒன்று கூற விரும்புகிறேன்.அருளும் அன்பும் இன்றி வாழ்பவர்கள் நிரயம் (நரகம்) புகுவர். அவர்களில் ஒருவனாக நீ சேரவேண்டாம்.குழந்தையைக் காக்கும் தாய் போல உன் நாட்டை நீ காப்பாற்றுக. அது கிடைத்தற்கு அரிய பேறு ஆகும்.


புறநானூறு 147

கல் முழை அருவிப் பன் மலை நீந்திச்,

சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்

கார் வான் இன் உறை தமியள் கேளா,

நெருநல் ஒரு சிறைப் புலம்பு கொண்டு உறையும்

அரி மதர் மழைக் கண் அம் மா அரிவை . . . . 

நெய்யொடு துறந்த மை இருங்கூந்தல்

மண்ணுறு மணியின் மாசு அற மண்ணிப்,

புது மலர் கஞல இன்று பெயரின்,

அது மன் எம் பரிசில் ஆவியர் கோவே.

                               - பெருங்குன்றூர் கிழார்.

பொருள்

கல்லுக் குகைகளில் அருவி கொட்டும் பல மலைகளைத் தாண்டி உன்னிடம் வந்துள்ளேன். என் யாழில் செவ்வழிப் பண் பாடிக்கொண்டு வந்துள்ளேன். ஆவியர் குடி மக்களின் அரசனே! நீ எனக்குப் பரிசில் தர விரும்பினால் அது நீ உன் மனைவியிடம் செல்வதுதான். நேற்று உன் இல்லம் சென்றபோது உன் மனைவி மழைக்கால மேகம் இடிமுழக்கத்தைக் கேட்டுக்கொண்டு தனியே இருந்தாள். கண்ணீரை அடக்கிக்கொண்டு இருந்தாள். கூந்தலில் எண்ணெய் வைக்காமல் இருந்தாள். அவள் தலையில் எண்ணெய் வைத்துக் குளித்துவிட்டுப் புதுமலர் சூடிக்கொள்ளும்படி நீ அவளிடம் செல். அதுதான் நீ எனக்குத் தரவேண்டிய பரிசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days