எனக்குள் தொலைந்துபோன
என் நிம்மதியைத்
தேடியலைகிறேன்.....
காலமும் கழிகிறது
மரண வலியோடு....
வாழ்வோ தொடர்கிறது....
கரைந்துபோன நாட்களுக்காய்
கதறுகிறது ஆன்மா...
உறைந்துபோன நிலையில்
குற்றுயிராய்க் கிடக்கிறது
கல்புக்குள்ளிருக்கும் கலிமா...
உறக்கமில்லாமல் தவித்த
இரக்கமற்ற இரவுகளில்
தவறவிட்ட என் தஹஜ்ஜுத்
விழிநீராய் வழிகிறது...
இறைவனை
நினைக்க மறந்த
என் தொழுகையின் ரூஹானிய்யத்
கனவுகளிலும் கறுப்பு நிறமாய்
கண்முன்னே தெரிகிறது
ஓத மறந்த அல்குர்ஆன்
நெஞ்சுக்குள் ஆணியாய்
ஓங்கி அறைகிறது
அதுவரை உச்சரிக்காத
தூய தஸ்பீஹ்கள்
என் மரணத் தறுவாயில்
என்னை வழிகூட்டிப் போகின்றன
என் கண்களின் ஓரம்
கசியும் நேரம்
வார்த்தைகள் சோகம் சுமந்து
மௌன மொழிகளால்...
இறைவனுக்கு நான்
எழுதிய கடிதங்கள்...
முகவரி தொலைத்து
விடை தெரியா வினாவோடு....
இன்னும் அவன் பாதத்தின் கீழே
பணிந்து ஸுஜூது செய்து அழுகிறது...
நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி ஆசிரியரும் களுத்துறை வலய தமிழ் மொழிப்பாட வளவாளரும் 'தமிழ்மொழி ஆசிரியர்கள்' குழுமத்தின் நிறுவனருமான திருமிகு. பேருவளை றபீக் மொஹிடீன் அவர்களது கவிதை இது.